world

img

குறைந்தபட்ச ஊதியம் அதிகரிக்கிறது; கொலம்பியா இடதுசாரி அரசு முனைப்பு

பொகோடா, அக்.26- கொலம்பியாவின் ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்ட இடதுசாரித் தலைவர் குஸ்தவோ பெட்ரோவின் அரசு தேர்தல் காலத்தில் தரப்பட்ட உறுதிமொழிகளை நிறைவேற்றுவதில் முனைப்பு காட்டி வருகிறது.

கொலம்பியாவின் வரலாற்றில் முதன்முறையாக இடதுசாரி அரசியல் தலைவர்களின் ஒருவர் ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். சாதாரண மக்களின் வாழ்வை மேம்படுத்தும் வகையில் பல்வேறு வாக்குறுதிகள் தரப்பட்டிருந்தன. ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றுள்ள குஸ்தவோ பெட்ரோ, வாக்குறுதிகளை நிறைவேற்றும் நோக்கத்துடன் பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறார்.

இதன் ஒருபகுதியாக, தொழிலாளர்கள் குறைந்தபட்ச ஊதியம் தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தொழிலாளர்கள், முதலாளிகள் மற்றும் அரசுத்தரப்பு என்று முத்தரப்பு பேச்சுவார்த்தை துவங்கியிருக்கிறது. முதல் கட்டத்தில், இலக்கை நிர்ணயித்திருக்கிறார்கள். 2023ஆம் ஆண்டில் இருந்து இந்தக் குறைந்தபட்ச ஊதியம் நடைமுறைக்கு வரும் என்றும், டிசம்பர் 30, 2022க்குள் பேச்சுவார்த்தை நிறைவு பெற்று, முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

தேசிய அளவிலான உற்பத்தி விகிதத்தின் அடிப்படையில் ஊதிய உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், தொழிலாளர்கள் தரப்பில் 15 முதல் 20 விழுக்காடு உயர்வை எதிர்நோக்குகின்றனர். முதலாளிகள் தரப்பில் 13 முதல் 15 விழுக்காடு வரையிலான சம்பள உயர்வை முன்வைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இடதுசாரி அரசு என்பதால் தொழிலாளர்கள் பக்கம் நிற்கும் என்றும் கருதுகிறார்கள்.

இந்தப் பேச்சுவார்த்தைகளில் ஊதிய உயர்வோடு, ஓய்வூதியம் மற்றும் அடுத்தாண்டு நாடாளுமன்றத்தின் முன் வைக்கப்படும் தொழிலாளர் நல சீர்திருத்தங்கள் ஆகியவை பற்றியும் விவாதிக்கப் போகிறார்கள்.